தமிழக செய்திகள்

அத்திவரதர் தரிசன விழாவில்: பக்தர்கள் அளித்த தங்க, வெள்ளி நகைகளுக்கு ரசீது வழங்கவில்லை - தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரியவந்தது

பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசன விழா கடந்த ஜூலை 1-ந்தேதி தொடங்கி 48 நாட்கள் நடைபெற்றது.

காஞ்சீபுரம்,

இந்த விழாவின்போது பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பட்டுச்சேலை, வெள்ளி, தங்கம் போன்றவற்றுக்கு ரசீது வழங்கப்பட்டதா?, அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலை எடுக்கப்பட்ட பிறகு இந்து சமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை அதிகாரிகள் முன்னிலையில் புனரமைப்புபணிகள் மேற்கொள்ளப்பட்டதா? என்று காஞ்சீபுரத்தை சேர்ந்த பக்தர் டில்லிபாபு என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் பெற விண்ணப்பித்தார்.

இதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது. அந்த பதிலில், அத்திவரதர் சிலை நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையானது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து வெளியில் எடுத்து 48 நாட்கள் பூஜை நடைபெறுகிறது.

அத்திவரதர் விழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதனால் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வெள்ளி, தங்கநகைகள், அலங்கார மாலை, பட்டாடைகளுக்கு ரசீது வழங்கி கவனம் செலுத்தினால் அன்றாட பணிகள் பாதிக்கும். ஆகவே ரசீது வழங்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.