சென்னை,
மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் சார்பில், அனைத்து செல்போன் நிறுவனங்களின் அழைப்புகளின் போதும் இருமலுடன் தொடங்கிய காலர் டியூனாக கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை தமிழில் வெளியிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை எழுப்பினர்.
தினத்தந்தி பத்திரிகையின் தலையங்கத்திலும் இந்த கோரிக்கை பலமாக ஒலித்தது. இவற்றின் பலனாக, கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் டியூனை முதல் முறையாக ஏர்டெல் செல்போன் சேவை நிறுவனம் தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளது. இதனால், அந்த விழிப்புணர்வு பிரசாரத்தை கேட்கும் தமிழர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பற்றி எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.
மேலும் இருமலுடன் ஒலித்து மக்களை அச்சப்படுத்திய இந்த விழிப்புணர்வு காலர் டியூன் தற்போது இருமலின்றி ஒலிப்பது சிறப்பு.