விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று இரவு முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்தனர். அவர்களை தடுக்க முயன்ற டாஸ்மாக் ஊழியர் பூமிநாதன் என்பவரை கொள்ளையர்கள் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
மேலும் அங்கிருந்த மற்ற ஊழியர்களையும் பீர் பாட்டில்களால் தாக்கியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த ரூ.6.47 லட்சம் ரூபாய், ஊழியரின் கையில் இருந்த 25 ஆயிரம் ரூபாய் மற்றும் 4 செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் மற்றும் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஏற்கனவே திருச்சுழி டாஸ்மாக் கடையில் காவலுக்கு இருந்த காவலரை தாக்கி செல்போன் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.