சென்னை,
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை நிறைவடைந்து கடந்த 27 ஆம் தேதி சசிகலா விடுதலையான நிலையில், நாளை மறுநாள் அவர் சென்னை வர உள்ளார். சசிகலாவை வரவேற்பதற்காக அமமுக கட்சியினர் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். சசிகலா வருகையை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் பலர் வாழ்த்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். சசிகலா நாளை மறுநாள் வரும் போது, சென்னையில் பேரணி நடத்த அமமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளருமான செந்தமிழன் சார்பில், சென்னையில் போரூர் முதல் 12 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கவும் பேரணி நடத்தவும் அனுமதி கேட்டு சென்னை காவல்துறையில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை பரிசீலித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில் நாளை மறுநாள் பெங்களூரில் இருந்து தமிழகம் வரும் சசிகலா மீது அதிமுக அமைச்சர்கள் மீண்டும் டிஜிபியிடம் புகாரளித்தனர். சென்னையில் டி.ஜி.பி. திரிபாதியை சந்தித்த அமைச்சர் தங்கமணி, அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் சசிகலா மீது மீண்டும் புகாரளித்தனர். அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது என ஏற்கனவே புகார் அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க முயற்சி செய்வதாக தினகரன், சசிகலா மீது அமைச்சர் சி.வி.சண்முகம் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், 4 ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு வரும் சசிகலா, அ.தி.மு.கவுக்கு உரிமை கோருகிறார். உச்சநீதிமன்ற தீர்ப்பையே அவமதிக்கும் வகையில் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துக்கிறார். தமிழகத்தில் அமைதியை சீரிகுலைக்க தினகரன், சசிகலா தரப்பு சதித்திட்டம் தீட்டி வருகிறது. யார் அ.தி.மு.கவினர், இரட்டை இலை யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்திவிட்டது. பொதுமக்கள் உடைமைக்கும், உயிருக்கும் ஆபத்து விளைவிக்க திட்டமிடுகின்றனர். 100 பேர் மனித வெடிகுண்டாக மாறுவோம் என மிரட்டல் விடுக்கிறார்கள் என்று தெரிவித்தார்.