தமிழக செய்திகள்

விசைத்தறி உரிமையாளரை அரிவாள்மனையால் வெட்டிய ஆட்டோ டிரைவர் கைது

பள்ளிபாளையம்

வெப்படை அருகே எளையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் (வயது 46). விசைத்தறி கூடம் நடத்தி வருகிறார். இவரது வீட்டுக்கு பின்புறம் ராஜேந்திரன் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவர். இந்தநிலையில் விசைத்தறி கூடத்தில் இருந்து காற்றில் பஞ்சு பறந்து ராஜேந்திரன் வீட்டுக்குள் விழுந்ததால் இருவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரன், பரமசிவனிடம் தகராறு செய்தார். இதில் தகராறு முற்றி ராஜேந்திரன், பரமசிவத்தின் முகத்தில் அரிவாள்மனையால் வெட்டினார். பலத்த காயம் அடைந்த பரமசிவம், ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில் வெப்படை சப்- இன்ஸ்பெக்டர் மலர்விழி வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தார்.