சென்னை,
தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணம் உயர்வுக்கான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருத்தப்பட்ட புதிய கட்டணம் விரைவில் வெளியாகும் என போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணம் உயர்வுக்கான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருத்தப்பட்ட புதிய கட்டணம் விரைவில் வெளியாகும் என போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் ஓடும் 3.46 லட்சம் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. புதிய கட்டண நிர்ணயம் குறித்து சென்னையில் கடந்த மாதம் 9-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த பேச்சுவார்த்தையில் 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளும், பயணியர் அமைப்புகளில் இருந்து 90 பேரும் பங்கேற்றனர். தொழிற்சங்கங்கள் தரப்பில் குறைந்தபட்ச கட்டணத்தை, 70 ரூபாயாக உயர்த்த வலியுறுத்தினர். பயணியர் அமைப்புகளின் நிர்வாகிகள் தரப்பில், குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தினர்.
இதுகுறித்து தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் நடந்த முக்கிய அம்சங்களை ஆராய்ந்தும், தற்போதுள்ள எரிபொருள் செலவு, மற்ற நகரங்களில் உள்ள ஆட்டோகட்டணம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களை முன்வைத்தும் ஒரு அறிக்கை தயாரித்தோம். இந்த அறிக்கை தமிழக உள்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஆய்வு செய்து, தமிழக அரசு விரைவில் ஆட்டோ கட்டண உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களில் குறுகிய தூர பயணத்துக்கு ஆட்டோவை லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். குறைந்தபட்ச கட்டணத்தை 50 ரூபாயாக நிர்ணயம் செய்ய வேண்டும். ஒவ்வொரு கி.மீ. பயணத்திற்கும் 22 முதல் 25 ரூபாய் வரை கட்டணம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது குறைந்தபட்ச கட்டணம் 25 ரூபாயாகவும், ஒவ்வொரு கி.மீ.க்கும் 12 ரூபாயாகவும் கட்டணம் இருக்கிறது.