தமிழக செய்திகள்

ஆட்டோ, டாக்சி கட்டண உயர்வு: ஓராண்டாகியும் உறுதிமொழியை நிறைவேற்றாத திமுக - அன்புமணி

ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகளை இயக்குவதற்கான செலவுகள் அதிகரித்து விட்டது என அன்புமணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாட்டில் ஆட்டோக்கள், டாக்சிகள் உள்ளிட்ட வாடகை ஊர்திகளின் கட்டணத்தை பணவீக்கத்திற்கு ஏற்ற வகையில், உயர்த்த வேண்டும் என்ற வாடகை ஊர்தி ஓட்டுனர் சங்கங்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப் படும் என்று திமுக அரசு வாக்குறுதி அளித்து ஓராண்டு நிறைவடைந்து விட்டது. ஆனால், கடந்த ஆண்டு அளித்த கட்டண உயர்வு குறித்த வாக்குறுதியை திமுக அரசு இன்னும் நிறைவேற்றாதது கண்டிக்கத்தக்கது.

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் நகரப்பகுதிகளில் இயக்கப்படும் ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகள் உள்ளிட்ட வாடகை ஊர்திகளுக்கான கட்டணம் கடைசியாக கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி உயர்த்தப்பட்டன. அதன்படி ஆட்டோக்களுக்கு குறைந்தபட்சக் கட்டணமாக 1.8 கி.மீக்கு 25 ரூபாயும், அதன் பின்னர் ஒரு கிலோ மீட்டருக்கு 12 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் 13-ஆம் ஆண்டுகளாகிவிட்ட நிலையில், இன்று வரை கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதனால் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் 10 ஆண்டுகளுக்கு மேலாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரை சென்னையில் சந்தித்து பேச்சு நடத்தினார்கள். அப்போது இந்த விவகாரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு சென்று புதிய கட்டண விகிதம் அறிவிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதன்பின் சரியாக ஓராண்டு நிறைவடைந்து இன்று முதல் இரண்டாம் ஆண்டு தொடங்கியுள்ளது. சட்டப்பேரவைக் கூட்டங்கள், அமைச்சரவைக் கூட்டங்கள், அரசு விழாக்கள் என பல தருணங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்தித்துள்ளார்.

கடந்த ஓராண்டில் எத்தனையோ அமைப்புகள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள். ஆனால், அமைச்சர் அளித்த வாக்குறுதியை நம்பி, தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று ஆட்டோ மற்றும் வாடகை டாக்சி ஓட்டுனர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், வாடகை ஊர்திக் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்ற வாக்குறுதி மட்டும் ஓராண்டாகியும் நிறைவேறவில்லை; ஓட்டுனர்கள் துயரமும் தீரவில்லை.

கடைசியாக கட்டணம் உயர்த்தப்பட்ட நாளில் இருந்து இன்று வரை பெட்ரோல், டீசல் விலை இரு மடங்காக உயர்ந்து விட்டது; காப்பீடு, உரிமம் உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்கள் கணிசமாக அதிகரித்து விட்டன. வாகனங்களின் உயர்கள், பேட்டரிகள் உள்ளிட்ட உதிரிபாகங்களின் விலைகள் 2 முதல் 3 மடங்கு அதிகரித்து விட்டன. இதனால் ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகளை இயக்குவதற்கான செலவுகள் அதிகரித்து விட்டன. ஆனால், அதற்கு இணையாக வாகன வாடகை உயர்த்தப்படாததால், அவற்றை வாடகைக்கு எடுத்து ஓட்டி வரும் ஏழை ஓட்டுனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டுள்ளது.

செலவுக்கு ஏற்ற வருவாய் இல்லாததால் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் தினமும் 15 மணி நேரம் உழைக்க வேண்டியுள்ளது. அப்போதும் கூட வாகன வாடகை, எரிபொருள் செலவு போக அவர்களுக்கு கிடைப்பது சில நூறு ரூபாய் மட்டும் தான். இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் மூன்று வேளையும் உணவு உண்ண முடியவில்லை. வாகனங்களுக்கான காப்பீடு, வரிகள், குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம் ஆகியவற்றை செலுத்த முடிய வில்லை. அதற்காக கடன் வாங்க வேண்டியிருப்பதால் லட்சக்கணக்கான ஓட்டுனர்கள் கடனாளியாகிவிட்டனர். மேலும் இயல்பை விட அதிக நேரம் உழைக்க வேண்டியிருப்பதால் ஓட்டுனர்களுக்கு உடல் நலக்கேடு ஏற்படுகிறது.

எரிபொருள் விலை உயர்வு, பிற கட்டணங்களின் உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆட்டோக்களின் குறைந்தபட்சக் கட்டணத்தை ரூ.50 ஆகவும், அதன்பின் கிலோ மீட்டருக்கு ரூ.25 வீதமும் வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுனர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வல்லுனர் குழுவை அமைத்து, அதன் பரிந்துரை அடிப்படையில் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கடந்த 2022-ஆம் ஆண்டில் ஆணையிட்டது. அதன்படி அரசுப் போக்குவரத்துத்துறை கூடுதல் இயக்குனர் தலைமையில் வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. ஆனால், அதன்பின் 3 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், இன்று வரை அக்குழு அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. அதனால் ஊர்திகளுக்கான வாடகையும் இதுவரை உயர்த்தப்படவில்லை.

வாடகை ஓட்டுனர்கள் பொருளாதாரத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள். அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. அதனால் அந்தக் கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், ஓராண்டாகியும் அந்தக் கோரிக்கை தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு மறுக்கிறது என்றால், தொழிலாளர்களுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் துரோகம் செய்வதையே தொழிலாக வைத்திருக்கிறது என்று தான் பொருள். அந்த கொடூர குணத்தைக் கைவிட்டு சாதாரண மக்களை பாதிக்காத வகையில் ஆட்டோ - டாக்சி வாடகைக் கட்டணத்தை திமுக அரசு உடனடியாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.