துவரங்குறிச்சி,
மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம் கவினார்பட்டியில் உள்ள புத்தக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.13 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் நேற்று நடைபெற்றது. மணப்பாறை எம்.எல்.ஏ. அப்துல்சமது முன்னிலை வகித்தார். விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு புதிய கட்டித்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுயதாவது:-
பள்ளிகள் தற்போது இயங்காத சூழ்நிலையில் பெற்றோர்கள் வேலைக்கு செல்லும் போது அவர்களின் பிள்ளைகளும் வேலைக்கு செல்வதாக தெரிகிறது. எனவே பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு செல்வோரை கல்வி அதிகாரிகள் மூலம் கணக்கெடுத்து மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். பள்ளிகள் திறந்த பின்னர் மாணவிகள் நலன்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடத்திட்டங்களில் விழிப்புணர்வு கல்வி கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.