தமிழக செய்திகள்

சென்னை மெரினா கடற்கரையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கைச்சிலம்பாட்டம், பறையாட்டம், பல்சுவை நடனம், உவரி களியல், கானா பாடல்கள், நடனம், கரோக்கி, சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலமாக வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

சென்னை

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சென்னை மெரினா நீலக்கொடி கடற்கரை பகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலமாக ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, இளம் வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், “உங்கள் வாக்கு உங்கள் உரிமை”யை உணர்த்தும் விதமாகவும், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாநகராட்சி மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் மெரினா கடற்கரை நீலக்கொடி கடற்கரை பகுதி 1-ல் (மெரினா நீச்சல் குளம் அருகில்) நடைபெற்ற கைச்சிலம்பாட்டம், பறையாட்டம், பல்சுவை நடனம், உவரி களியல், கானா பாடல்கள், நடனம், கரோக்கி, சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலமாக வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

இதனை தொடர்ந்து, மெரினா கடற்கரை நீலக்கொடி கடற்கரை பகுதி 2-ல் (விவேகானந்தர் இல்லம் எதிரே) நடைபெற்ற கழியலாட்டம், பறையாட்டம், ஜிக்கடம், உவரி களியல், கானா பாடல்கள், நடனம், கரோக்கி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலமாக வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

இந்த கலை நிகழ்ச்சிகளில் 70-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று சிறப்பாக கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். நேற்று மாலை 5.30 மணி முதல் மூன்று மணி நேரம் மெரினா நீலக்கொடி கடற்கரை பகுதியில் நடைபெற்ற இந்த கலை நிகழ்ச்சிகளின் மூலமாக பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.