சென்னை,
ஊட்டி பைகாரா ஏரியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு சவாரி நடத்தப்படுகிறது. இந்த ஏரியில் பெட்ரோல், டீசல் மோட்டார் படகுகள் பயன்படுத்தப்படுவதால், ஒலி மாசு ஏற்படுவதுடன், ஏரி நீரும் மாசடைவதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி. பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன், ''கோவையில் உள்ள சலீம் அலி பறவையியல் கல்வி நிறுவனம், ஊட்டியில் உள்ள மத்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் உள்ள நிபுணர்களை கொண்ட ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்'' என்று உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் அதிகாரிகள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதிகள், ''கடந்த முறை பிறப்பித்த உத்தரவை சலீம் அலி பறவையியல் கல்வி நிறுவனம், ஊட்டியில் உள்ள மத்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு கோவை மற்றும் நீலகிரி மாவட்ட நீதிபதிகள் அனுப்பி வைக்கவேண்டும்'' என்று உத்தரவிட்டனர்.
இந்த நிபுணர்கள் பைகாரா ஏரி சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும் வரை, அந்த ஏரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மோட்டார்களை கொண்ட படகுகளை இயக்கக்கூடாது. அதற்கு தடை விதிக்கிறோம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.