சென்னை,
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு வளாக கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி 1 கி.மீ. சுற்றளவுக்கு எந்த கட்டுமான பணிகளும் மேற்கொள்ள தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு கட்டுமான பணிகள் மேற்கொள்ள இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சதுப்பு நிலத்தின் எல்லையை துல்லியமாக தீர்மானிப்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை டிசம்பர் 2-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர். தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 3-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.