தமிழக செய்திகள்

கல்லூரி விழாக்களில் அரசியல் பேச தடை; கல்வி இயக்குனர் உத்தரவு

கல்லூரி விழாக்களில் அரசியல் பேச தடை விதித்து கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

சென்னை,

தமிழக கல்லூரி கல்வி இயக்குனர் ஜெ.மஞ்சுளா, அனைத்து மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர்கள் மற்றும் அனைத்து அரசு கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கல்லூரிகள் நடத்தும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்கள் தங்கள் உரைகளில் அரசியல் கலந்து பேசுவதாக தெரியவருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் மாணவர்களின் கல்விக்கு இடையூறாக அமையும். இதனால் மாணவர் கல்வியும், ஆராய்ச்சி மனப்பான்மையும் பாதிக்கும். எனவே கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நபர்கள் அரசியல் கட்சிகளின் கொள்கைகளையும், பிற இயக்கங்களின் கருத்துகளையும் பரப்புவதையும், விவாதிப்பதையும் தவிர்க்க வேண்டும். அவ்வாறான விழாக்களுக்கு அனுமதி மறுக்க வேண்டும்.

மேலும் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர்கள், தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளுக்கு இதுகுறித்து உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.