தமிழக செய்திகள்

பருவமழைக்கு முன் கண்மாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்-யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தல்

பருவமழைக்கு முன் கண்மாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

பரமக்குடி

பரமக்குடி ஊராட்சி யூனியன் கூட்டம் அதன் தலைவர் சிந்தாமணி முத்தையா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சரயு ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் கருப்பையா வரவேற்றார். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து யூனியன் துணைத் தலைவர் சரயுராஜேந்திரன் பேசுகையில், பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்மாய்களை தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மழைக்காலம் வருவதால் மழை நீரை தேக்கி வைக்க ஏதுவாக இருக்கும்.

அதைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சிந்தாமணி முத்தையா பேசுகையில், பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து 3 ஆயிரம் குழந்தைகளுக்கு தினமும் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

உணவு அருந்தும் குழந்தைகளுக்கு தேவையான தட்டு, டம்ளர்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் தலா ரூ.48,000 வீதம் 27 சத்துணவு மையங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார். இதில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் தேவ பிரியதர்ஷினி நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT