சென்னை,
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த நல்லகண்ணு உடலுக்கு மத்திய மந்திரி எல்.முருகன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் கூறியதாவது:-
நல்லகண்ணு கம்யூனிஸ்டு இயக்கத்திற்காக தன்னுடைய முழு வாழ்க்கையையும் அர்பணித்த ஒரு மகான். அவரின் வாழ்நாள் முழுவதிலும் அடித்தட்டு மக்களின் நலனுக்காக வாழ்ந்தவர். இன்றைய இளைஞர்களுக்கும் அரசியலில் ஒரு முன்னுதாராமாக வாழ்ந்திருக்கிறார்.
சாதாரண மனிதன் அரசியலில் எவ்வளவு உயரத்திற்கு வந்தாலும், இன்றும் சொந்த வீடு இல்லாத ஒரு அரிய தலைவர் நல்லகண்ணு. அப்படிப்பட்ட தலைவரின் மறைவு நம்மை மிகப்பெரிய துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நேரத்தில் அவரின் குடும்பத்தார், கட்சி தொண்டர்களுடன் துயரத்தை பகிர்ந்து கொள்வோம். நல்லகண்ணுவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் மத்திய அரசிடம் பரிந்துரைப்பேன்.
இவ்வாறு மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.