மதுரை,
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். மதுரை விமான நிலையம் வந்த அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும், மேள தாளங்களுடன், வழி நெடுகிலும் மலர் தூவி ஜே.பி.நட்டாவிற்கு வரவேற்றனர்.
பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று மாலை 3.30 மணிக்கு கரைக்குடி எம்.ஏ.எம். மகாலில் நடைபெறும் பா.ஜனதா மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசுகிறார்.
பின்னர், மாலை 4.45 மணி முதல் 5.30 மணி வரை மகளிர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இரவு என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனைகளை விளக்கி பேசுகிறார்.
இதனை தொடர்ந்து நாளை காலை 7.45 மணிக்கு பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் மகாலில் பகல் 11 மணிக்கு பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் அணிகளின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் சோழன் சித.பழனிசாமி, பா.ஜனதா கட்சி மாநில பொறுப்பாளர் ரவி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.