தமிழக செய்திகள்

பூத்துக்குலுங்கும் காகித மலர்கள்

பூத்துக்குலுங்கும் காகித மலர்கள்

கோத்தகிரி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சீசன் காரணமாக ஊதா நிறத்தில் காணப்படும் 'போகெய்ன் வில்லா' என்ற காகித மலர்கள் பூத்துக்குலுங்கி வருவது காண்போரின் மனதை கொள்ளை கொள்வதாக அமைந்துள்ளது. பிரேசில் மற்றும் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட போகெய்ன் வில்லா மலர்கள், வசந்த காலத்தை வரவேற்கும் வகையில், கோடை காலத்தில் பூத்துக்குலுங்கும். இளஞ்சிவப்பு, ஊதா, வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு என பல்வேறு வண்ணங்களில் காகித மலர்கள் உள்ளன.தற்போது கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை சீசன் தொடங்கி உள்ள நிலையில், இந்த மலர்கள் அதிகளவில் பூத்துக்குலுங்குகிறது. சாலையோரங்களிலும், குடியிருப்புகளிலும், அரசு அலுவலக வளாகங்களிலும், வீடுகளிலும் அழகுக்காக பூத்துக்குலுங்கும் இந்த மலர்களை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ரசித்து செல்கின்றனர். குறிப்பாக கோத்தகிரி பேரூராட்சி பயணியர் விடுதி, தாசில்தார் அலுவலக வளாகம் உள்ளிட்ட இடங்களில் தற்போது ஊதா நிற காகித மலர்கள் பூத்துக்குலுங்கி வருகின்றன. மேலும் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையோரம் தட்டப்பள்ளம் பகுதியில் ஒரு சிறிய வீட்டின் மேல் படர்ந்து பூத்துக்குலுங்கும் இந்த மலர்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். இந்த மலர்கள் காண்போரின் மனதை வசீகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.