சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பேரம்பாள் தெருவைச் சேர்ந்தவர் பார்வதி (வயது 58). இவருடைய கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தன்னுடைய 2 மகன்களுக்கும் சொத்துக்களை பிரித்து தருவதாக கூறி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு பார்வதியின் 2-வது மகனான அருள்(28) குடிபோதையில் வீட்டுக்கு வந்து தனது தாயிடம் ரூ.2 லட்சம் கேட்டு தகராறு செய்தார். பார்வதி தன்னிடம் பணம் இல்லை என்று மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அருள், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெற்ற தாய் என்றும் பாராமல் பார்வதியின் தலையில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றார்.
பார்வதியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தாயை கத்தியால் வெட்டிய அருளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.