நீலகிரி,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா புத்தூர்வயல் பகுதியை சேர்ந்தவர் சாஜஹான். இவரது மகன் மிஸ்ஹாப் (வயது 14). சிறுவன் பாக்கனா அரசு உயர்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், சிறுவன் நேற்று பாக்கனாவுக்கு முடிவெட்ட சென்று விட்டு புத்தூர் வயலில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த காட்டு யானை திடீரென சிறுவன் மிஸ்ஹாபை தாக்கியது. இதில் சிறுவன் படுகாயமடைந்தார்.
யானை தாக்கியதில் படுகாயமடைந்த சிறுவன் கதறி அழுதுள்ளான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து சென்ற அக்கம்பக்கத்தினர், சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு மிஸ்ஹாவை பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டு யானை தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளனர்.