பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா குரூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 38). இவருக்கு அப்பகுதியில் 2 வீடுகள் உள்ளன. அதில் ஒரு வீட்டை பூட்டி விட்டு மற்றொரு வீட்டில் தூங்குவது வழக்கம். இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு அவரது வீட்டின் பூட்டை கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் வைத்திருந்த தங்க சங்கிலி, மோதிரம் மற்றும் ரூ.15 ஆயிரத்தை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கைரேகைகளை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.