தமிழக செய்திகள்

பஸ் கட்டண உயர்வு விவகாரத்தில் பா.ஜனதாவில் கருத்து வேறுபாடு இல்லை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

பஸ் கட்டண உயர்வு விவகாரத்தில் பா.ஜனதாவில் கருத்து வேறுபாடு இல்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

கோவை

பஸ் கட்டண உயர்வு விவகாரத்தில் பா.ஜனதாவில் கருத்து வேறுபாடு இல்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

கோவைக்கு வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:

பஸ் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே பஸ் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என்று பா.ஜனதா கேட்டு வருகிறது. படிப்படியாக கட்ட ணத்தை உயர்த்தி இருந்தால் மக்களுக்கு சிரமம் இருக்காது. அ.தி.மு.க. கடந்த 6 ஆண்டாக பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை. போக்குவரத்து கழக நன்மைக்காக உயர்த்தி உள்ளோம் என்று கூறி அரசு மோசடி செய்து வருகிறது.

தற்போது எந்த தேர்தலும் வரவில்லை என்பதால் தங்களுடைய சுயநலத்துக்காக உயர்த்தி உள்ளனர். பஸ் கட்டண உயர்வு தொடர்பாக பா.ஜனதாவில் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. கட்டணத்தை அதிகப்படுத்தி மக்கள் தலையில் சுமத்தி உள்ளனர் என்பதே பா.ஜனதாவின் நிலைப்பாடு ஆகும். பஸ் கட்டணத்தை உயர்த்தியதை சரி என்று நான் கூறவில்லை. ஆனால் நான் கூறியதை சிலர் தவறாக புரிந்து கொண்டனர்.

திராவிட கட்சிகள் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்தும் தமிழகத்துக்கு எந்த ஒரு பயனும் இல்லை. எனவே தமிழகத்தில் இருந்து திராவிட கட்சிகளை தூக்கி எறிய வேண்டும்.

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுவதே பா.ஜனதாவின் குறிக்கோள் ஆகும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெற்று அதிக இடங்களை கைப்பற்றும். அதுபோன்று சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றும். அதற்கான திட்டங்களை தான் நாங்கள் இப்போது செயல்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.