சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஊரடங்கு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வரும் நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அரிசி விலை கிலோவுக்கு ரூ.5 வரை உயர்ந்திருக்கிறது. மளிகை கடைகளிலும், அரிசி மட்டும் விற்பனை செய்யும் கடைகளிலும் மிகக்குறைந்த அளவிலேயே அரிசி இருப்பு உள்ளது. இப்போதுள்ள அரிசி இருப்பு இன்னும் சில நாட்களுக்கு மட்டும்தான் போதுமானது என்பதால், அடுத்த வாரத்தில் கடுமையான அரிசித் தட்டுப்பாடு ஏற்படும். அதேபோல் அனைத்து வகையான எண்ணெய், பருப்பு விலைகள் உயர்ந்திருக்கின்றன.
ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு அரிசி வருவது முற்றிலுமாக தடைபட்டு விட்டது. இத்தகைய சூழலில் விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சீபுரம் மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் இருந்து கிடைக்கும் அரிசியைக் கொண்டுதான் தமிழகத்தின் அரிசி தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
ஆனால், அங்குள்ள அரிசி ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டதால் அரிசி உற்பத்தி முழுமையாக தடைபட்டு விட்டது. இதுதான் விலை அதிகரிப்புக்கும் காரணங்கள் ஆகும்.
எனவே தட்டுப்பாட்டை போக்க பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு, அந்த ஆலைகளில் இருந்து தமிழகம் முழுவதும் லாரிகள் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல அரசு அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.