விழுப்புரம் ,
சென்னையில் வசிக்க கூடிய மக்கள் தொடர் விடுமுறை காரணமாக தென் மாவட்டங்களுக்கு அதிகளவு செல்கின்றனர். விடுமுறை நிறைவடைந்து வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் பலரும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு படை எடுக்க தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக அவ்வப்போது சென்னையில் போக்குவரத்து நெரிசல் நிலவுவது வழக்கம்.
இந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காரில் விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னைக்கு வந்துகொண்டிந்தனர். அப்போது முன்னால் ஒரு லாரி சென்றுகொண்டிருந்தது. லாரி டிரைவர் திடீரென வாகனத்தை மெதுவாக இயக்கியதாக கூறப்படுகிறதும்.
இதன் காரணமாக பின்னால் வந்த இரண்டு கார்கள் ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான கார் ஒன்றில் திடீரென தீ மளமளவென எரியத்தொடங்கியது. இதனைக்கண்டவர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். காரில் இருந்த 4 பேரும் உடனடியாக சுதாரித்துக்கொண்டு காரை விட்டு இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டன.
விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சாலையில் பற்றி எரியும் காரை தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக அந்த பிரதான சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.