தமிழக செய்திகள்

காரை வழிமறித்து வக்கீல் மீது தாக்குதல்

கொள்ளிடம் அருகே காரை வழிமறித்து வக்கீல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக 5 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே காரை வழிமறித்து வக்கீல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக 5 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

செக் மோசடி

மயிலாடுதுறை அருகே உள்ள அரிவலூர் கிராமத்தைச் சேர்ந்த ஈழவளவன் (வயது 50). இவர் விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர். இவருக்கும் சென்னையை சேர்ந்த ரவிராஜன் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரவிராஜன் மீது செக் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு செம்பனார்கோவில் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.. இந்த வழக்கில் ரவிராஜன் தரப்பில் வாதிடுவதற்காக சென்னையை சேர்ந்த வக்கீல் சண்முகம் ஆஜராக இருந்தார்.

காரை வழிமறித்து தாக்குதல்

சம்பவத்தன்று சண்முகம் சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். இதனை அறிந்த ஈழவளவனின் ஆதரவாளர்களான புத்துரைச் சேர்ந்த குண்டுமணி (எ) மணி, சிவா, ரவி, சரஸ்வதிவிளாகம் கிராமத்தைச் சேர்ந்த பாரதி ஆகியோர் புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரி அருகே காரை வழிமறித்தனர்.

தொடர்ந்து காருக்குள் இருந்த வக்கீல் சண்முகத்தை வெளியே இழுத்து சரமாரியாக கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது.

வழக்குப்பதிவு

இதுகுறித்து வக்கீல் சண்முகம் கொள்ளிடம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சம்பவத்துக்கு காரணமாக இருந்த ஈழவளவன் மற்றும் குண்டுமணி (எ) மணி, சிவா, ரவி, பாரதி 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.