தமிழக செய்திகள்

பழைய பொருட்கள் திருடிய 2 பேர் மீது வழக்கு

தேனி அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் பழைய பொருட்கள் திருடிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி பெரியகுளம் சாலையை சேர்ந்தவர் நாகமணி (வயது 83). முன்னாள் ராணுவ வீரரான இவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், 'நான் குடியிருந்த வீட்டை ரெயில்வே மேம்பாலம் பணிக்காக காலி செய்து விட்டேன். வீட்டின் முன்பு ரூ.2 லட்சம் மதிப்பிலான பழைய பொருட்களை வைத்திருந்தேன். அதனை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த டிராக்டர் உரிமையாளர் வீமன், அவருடன் வேலை பார்க்கும் பன்னீர் ஆகிய 2 பேரும் திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தேனி போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில், வீமன், பன்னீர் ஆகிய 2 பேர் மீதும் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT