புதுக்கோட்டை,
புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே, அவதூறாக பேசிய ஆடியோ வெளியிட்ட மர்ம நபர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கல்வீச்சில் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். அப்போது நடந்த மோதல்,கல்வீச்சில் 13 பேர் காயமடைந்தனர். போலீஸ் வாகனங்களும் கல் வீச்சில் சேதம் அடைந்தன.
மேலும் அந்த சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள், பொன்னமராவதி சாலையில் உள்ள கடைகளின் முன்பு வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் மற்றும் சில கடைகளை அடித்து நொறுக்கினார்கள். அவர்கள் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொன்னமராவதிக்கு வரும் சாலைகள் அனைத்திலும் பனைமரம் உள்ளிட்ட மரங்களை வெட்டிப்போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் பொன்னமராவதி நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
வன்முறை சம்பவத்தை தொடர்ந்து பொன்னமராவதி தாலுகா முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், பொன்னமராவதி மோதல் தொடர்பாக ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.