தமிழக செய்திகள்

பிரேமலதா மீதான வழக்கு ரத்து: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தேர்தல் விதிகளை மீறியதாக கூறி பிரேமலதா விஜயகாந்த் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மதுரை,

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா, கடந்த 2011ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தபோது விதிகளை மீறியதாக புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் தாடிக்கொம்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு திண்டுக்கல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நிலுவையில் இருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் பிரேமலதா உள்ளிட்ட 4 பேர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார். முடிவில், பிரேமலதா உள்ளிட்டோர் மீது கீழ் கோர்ட்டில் நிலுவையில் உள்ள தேர்தல் வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.