தமிழக செய்திகள்

பீடி கேட்டு தொழிலாளி மீது தாக்குதல்: 2 பேர் மீது வழக்குப்பதிவு

பீடி கேட்டு தொழிலாளியை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில்;

சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேலு மகன் மாரியப்பன் (வயது 49). கோமதியாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் செல்வம், சுரேஷ். இவர் 3 பேரும் நண்பர்கள் என தெரிகிறது. 3 பேருக்கும் மது அருந்துதல், புகைப்பிடித்தல் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாரியப்பன் தனது உடல்நிலை சரியில்லாமல் போகவே பீடி குடிப்பதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று சங்கரன்கோவில் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெரு அருகே மாரியப்பன் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த செல்வம், சுரேஷ் ஆகிய இருவரும் அவரிடம் பீடி கேட்டுள்ளனர். அப்போது அவர், தான் அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் அருகில் இருந்த செங்கலை எடுத்து மாரியப்பனை கடுமையாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த மாரியப்பன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.