மதுரை,
சென்னையில் இருந்து விமானம் மூலம் விடுதலைசிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த ஒரு வார காலமாக நாடாளுமன்றம் இரு அவைகளுமே இயங்கவில்லை. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்கிற கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மையப்படுத்தி எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.
குறிப்பாக பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி செல்போன் ஒட்டுகேட்பது போன்ற நடவடிக்கைகளில் மோடி அரசு ஈடுபட்டு இருப்பது அம்பலமாகி இருக்கிறது. பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மோடி அரசு தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. இது மிக மிக ஆபத்தான ஒரு நடைமுறை.
அ.தி.மு.க. அமைச்சரவையில் ஒரு அமைச்சர் மட்டும் இல்லாமல் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான பல அமைச்சர்கள் உள்ளனர் என்று ஊடகங்களில் ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆகவே ஒரு குறிப்பிட்ட அமைச்சரின் மீது மட்டும் காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சொல்லுவது வியப்பாக இருக்கிறது. முறைப்படி சட்டப்படி விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.