தமிழக செய்திகள்

தமிழகத்தில் மேலும் இரண்டு இடங்களில் கொரோனா பரிசோதனை மையம் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் மேலும் இரண்டு இடங்களில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்தியாவில் 223 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரசினால் ஐந்து பேர் பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேலும் இரண்டு இடங்களில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழகத்தில் ஏற்கனவே சென்னை, நெல்லை, திருவாரூர், தேனி மற்றும் சேலத்தில் கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளது. இந்நிலையில் மேலும் 2 இடங்களில் (கோவை மற்றும் சென்னை) கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 7ஆக உயர்கிறது. கொரோனா பரவலைத்த தடுக்க விடுமுறை அறிவித்த பிறகும் வெளி இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பது கவலையளிக்கிறது. எனவே தேவையற்ற பயணத்தை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.