சென்னை,
வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இன்று தொடங்கியது.
இதன்காரணமாக இன்று (25-10-2021) திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, திருப்பூர், கரூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகம், கேரளா, புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை இன்று முதல் தொடங்கி உள்ளது என்றும், இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பான அளவே இருக்கும் என்றும், தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் ஜூன் 1 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலகட்டமே தென்மேற்கு பருவமழை காலமாகும். நடப்பாண்டு தென்மேற்குப் பருவமழை கடந்த ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் விடை பெற்றுள்ளது. தென்மேற்குப் பருவமழை இயல்பை விட 23 சதவிகிதம் கூடுதலாக பெய்துள்ளது என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.