சென்னை,
நிவர் புயல் காரணமாக 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன், நிவர் புயல் நாளை மாலை புதுச்சேரி அருகே தீவிர புயலாக கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் நேரத்தில் புதுவை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும்.
கடற்கரை பகுதிகளில் கடல் அலைகள் இயல்பை காட்டிலும் 2 மீட்டர் வரை கூடுதலாக உயர்ந்து கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
நாளை புயல் கரையை கடக்கும்போது செங்கல்பட்டு, கடலூர், நாகை, விழுப்புரம், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் புயல் காரணமாக வரும் 27-ம் தேதி வரை தமிழகம் புதுச்சேரியில் மழை இருக்கும் என்றும் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூரில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அதேபோல் தஞ்சை, திருவாரூர், புதுச்சேரியிலும் இன்று நிவர் புயல் காரணமாக மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் நாளை இடி மின்னலுடன் கூடிய அதீத கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.