சென்னை,
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கடந்த வாரம் முழுவதும் மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
வெப்பசலனத்தால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் (இன்று) ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில், ஊத்தங்கரை, ஏற்காடு தலா 9 செ.மீ., புதுக்கோட்டை, செய்யூர் தலா 7 செ.மீ., பெருங்களூர், லப்பைக்குடிக்காடு, கீழ்அணைக்கட்டு, மேட்டூர், கீழசெருவாய் தலா 6 செ.மீ., கீரனூர், நத்தம், சீர்காழி, ஆத்தூர், மருங்கபுரி, சிதம்பரம், திருவலங்காடு தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது.