சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழையும், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவிற்கு இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அங்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.