வேலூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் கடந்த 26-ந் தேதி பிரம்மோற்சவ விழா தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இந்த நிலையில் முக்கிய விழாவான தேர்த்திருவிழா நேற்று காலை நடந்தது. முன்னதாக தேர் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் வணிகர்கள், வியாபாரிகள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர்செல்லும்பாதைகளில் நேர்த்திக் கடன் செலுத்தினர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. அப்போது பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாமிக்கு நேர்த்திக் கடனை செய்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் செயல் அலுவலர் அண்ணாமலை உள்ளிட்டோர் செய்திருந்தனர். தொடர்ந்து வருகிற 7-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.