தமிழக செய்திகள்

சென்னை: போதை மாத்திரை விற்பனை செய்த பட்டதாரி இளம்பெண் உட்பட 6 பேர் கைது...!

சென்னை அருகே போதை மாத்திரை விற்பனை செய்த இளம்பெண் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போரூர்,

சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் விளையாட்டு மைதானம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை நடப்பதாக நேற்று தி. நகர் உதவி கமிஷனர் பாரதிராஜாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார், வீராசாமி ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த அசோக் நகர் புதூரை சேர்ந்த கிஷோர் (23) கே.கே நகர் ராணி அண்ணா நகர்குடியிருப்பை சேர்ந்த கிஷோர்குமார் இருவரையும் சந்தேகத்தின் பேரில் மடக்கிய போலீசார் அவர்களது பையை சோதனை செய்தனர். அப்போது அவரிகளிடம் ஏராளமான போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

பின்னர், அவர்கள் கொடுத்த தகவலின்படி கொத்தவால் சாவடியை சேர்ந்த பூங்குன்றன்(26) கோகுல்(24) பூந்தமல்லியை சேர்ந்த ராஜலட்சுமி (22) ராஜபாளையத்தை சேர்ந்த முத்துப்பாண்டி ஆகிய 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இதே போன்று இவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள், 2 லேப்டாப் ஒரு ஐபேடு, 8 செல்போன்கள், ரூ. 4 லட்சத்து 41ஆயிரத்து 300 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்துள்ளனர்.