சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா பாதித்தவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தபால் வாக்கு அளிப்பதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு வாக்குச் சீட்டுகளை வழங்கும் பணி நேற்று நடைபெற்றது. இதையடுத்து இன்று முதல் சென்னையில் தபால் வாக்கு பெறும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகள் பெறப்படுகின்றன.
இதற்கிடையில் தபால் வாக்கு பதிவு செய்வதில் முறைகேடுகளை தவிர்க்க, தபால் வாக்கு உறைகளில் வேட்பாளர்களின் பிரதிநிதிகளின் கையெழுத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியும் தி.மு.க தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போதைய நிலையில் இதுபோன்ற புதிய நடைமுறையை மேற்கொள்ள முடியாது என்றும், தொகுதியில் ஏராளமான வேட்பாளர்கள் இருப்பதால் இது சாத்தியமில்லை என்றும் தெரிவித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தபால் வாக்குகளை சிசிடிவி கேமரா பொருத்திய அறையில் பாதுகாக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளனர். தபால் வாக்குகளில் எந்த ஒரு குற்றச்சாட்டும் இடம்பெறாத வகையில் கண்காணிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.