தேர்தல் 2026

சென்னை காவலர்கள் 18, 20-ம் தேதிகளில் தபால் ஓட்டுக்களை பதிவு செய்ய நடவடிக்கை

வாக்காளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப 96 வாக்குப்ப திவு குழுக்கள் பிரித்து அனுப்பப்பட்டது.

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் சுமார் 35 ஆயிரம் பேருக்கு தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு, படிவம்-12டி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்பட்டது.

அதில் 8,947 பேர் வீட்டில் இருந்தே வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு வீட்டிலேயே வாக்குப்பதிவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டது. இதற்காக சட்டமன்ற தொகுதி வாரியாக, வாக்காளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப 96 வாக்குப்ப திவு குழுக்கள் பிரித்து அனுப்பப்பட்டது.

இதனையடுத்து மூத்த மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான தபால் வாக்கு சேகரிக்கும் பணி நேற்று தொடங்கியது. தபால் வாக்கு செலுத்திய வாக்காளர்கள் மிகவும் ஆர்வமுடன், உற்சாகமாக தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள். 100 வயதை கடந்த வாக்காளர்கள் முகத்தில் புன்னகை தழும்ப தங்கள் வாக்கை செலுத்தியதை காணமுடிந்தது.

இந்த நிலையில், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிவுறுத்தலின்படி 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் சென்னை காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் வருகிற 18, 20-ம் தேதிகளில் தபால் ஓட்டுக்களை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 18,971 காவலர்கள் தபால் வாக்குகள் பதிவு செய்ய உள்ளனர்.