சென்னை,
அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் எம்.ஜி.ஆரின் பிறந்ததினத்தன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து அதிமுகவினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அதிமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து அதிமுகவின் கட்சிக் கொடியை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் ஏற்றி வைத்தனர். இதன் பின்னர் அங்கிருந்த செய்தியாளர்கள், கட்சி தொண்டர்கள் உள்ளிட்டோருக்கு இனிப்புகள் வழங்கி எம்.ஜி.ஆர். பிறந்தநாளை கொண்டாடினர்.