தமிழக செய்திகள்

மதுரையில் இன்று திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு - மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

இன்று மதுரை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை,

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசின் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி வருகிறார்.

அந்த வகையில், இன்று (சனிக்கிழமை) அவர் மதுரை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இன்று காலை 9.30 மணிக்கு சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் புறப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காலை 10.30 மணிக்கு மதுரையை சென்றடைகிறார்.

பின்னர் மதுரையில் இருந்து காலை 10.45 மணிக்கு காரில் புறப்பட்டு, எல்காட் தொழில்நுட்ப பூங்காவுக்கு வருகை தருகிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுவிட்டு, காலை 11.35 மணிக்கு பின்னாகிள் நிறுவனத்தின் திறன் மேம்பாட்டு கட்டிடத்தினை திறந்து வைக்கிறார்.

பின்னர், அங்கிருந்து காலை 11.45 மணிக்கு மதுரை தமுக்கம் மைதானம் நோக்கி காரில் புறப்படுகிறார். அங்கு மதியம் 12.25 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத் துறை மேம்பாலத்தின் ஒரு பகுதியினை திறந்து வைப்பதுடன் மருதுபாண்டியர் சகோதரர்களின் உருவச் சிலையினையும் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து, மதியம் 12.35 மணிக்க அங்கிருந்து புறப்பட்டு மதியம் 12.45 மணிக்கு மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். அங்கு, மேம்படுத்தப்பட்ட கணினி ஆய்வகத்தினை அவர் தொடங்கிவைக்கிறார்.

பின்னர், மதியம் 12.50 மணிக்கு அங்கிருந்து புறப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மதியம் 1.05 மணிக்கு வண்டியூர் வருகிறார். அங்கு, புனரமைக்கப்பட்ட கண்மாயினை திறந்து வைப்பதுடன், ஆங்குரன் அறிவியல் மையம், பேரூராட்சிகளின் புதிய அலுவலகக் கட்டிடம் மற்றும் 867 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தினையும் அவர் திறந்து வைக்கிறார்.

பின்னர், மதியம் 1.20 மணிக்கு மதுரை விருந்தினர் மாளிகைக்கு செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு ஓய்வெடுக்கிறார். மாலை 4.30 மணிக்கு அங்கிருந்து கலைஞர் திடல் புறப்பட்டு சென்று, மாலை 5 மணிக்கு அங்கு நடைபெறும் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.

பின்னர், அங்கிருந்து மாலை 6.15 மணிக்கு காந்தி நினைவு மண்டபத்திற்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "மறவோம்" என்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

அதன்பிறகு, மாலை 6.30 மணிக்கு மதுரை விமான நிலையம் புறப்படும் அவர், இரவு 7.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். இரவு 8.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அவர், அங்கிருந்து காரில் வீடு திரும்புகிறார்.