சென்னை,
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். எச்.ராஜாவின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட எச்.ராஜா, மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மூலம் நன்கு குணமடைந்து வருகிறார். அவர், தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உரையாடி வருகிறார்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவின் உடல்நலம் குறித்து குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார்.
மேலும் அவர் பூரண குணமடைய வேண்டும் என்று குடும்பத்தினரிடம் முதல்-அமைச்சர் விருப்பம் தெரிவித்தார். அவருடன் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் சென்று நலம் விசாரித்தார்.