

சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
2026 - 27ம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை சம்பிரதாய நடைமுறைகளை மீறி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்திருக்கிறார். 83 நிமிட உரையில் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஆனால் நாட்டில் நிலவுகிற வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளின் வருமானத்தை கூட்டுவது, விலைவாசிகளை கட்டுப்படுத்துவது, சிறு, குறு தொழில்களுக்கு ஊக்கம் தருகிற வகையில் எந்த விதமான அறிவிப்பும் வரவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பின்படி இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிற பொருட்களுக்கு 50 சதவீத வரிவிதிப்பில் இருந்து நாட்டில் உள்ள தொழில்களை எப்படி பாதுகாக்க போகிறார் என்பதற்கான எந்த விதமான அறிவிப்பும் இல்லை. நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் பயனடையத்தக்க வகையில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் எதையும் பட்ஜெட் அறிவிப்பில் காண முடியவில்லை.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 4.2 லட்சம் கோடி. இதில் 30 சதவீதம் சிறு குறு நடுத்தர தொழில்களில் இருந்து வருகிறது. இதை நம்பி 22 கோடி பேரின் வாழ்வாதாரம் இருக்கிறது. அத்துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகை வெறும் ரூ.10 ஆயிரம் கோடி. இது யானைப் பசிக்கு சோளப்பொரி போட்டது போல் அமைகிறது. கடந்த பட்ஜெட்டில் இதே துறைக்கு ரூ.22 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு அதில் ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே செலவிடப்பட்டது. சிறு, குறு, தொழில்கள் கடன் பெறுவது தற்போது உள்ள கடினமான நிலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிற பொருட்களை சந்தைப்படுத்த அந்நிய நிறுவனங்களைதான் நம்பி இருக்கிறது. அதற்கு மாற்றாக உள்ளூர் சந்தைகள் உருவாக்கப்படவில்லை. இந்த பின்னணியில் கார்ப்பரேட்டுகளின் தயவில்தான் பொருள்களை சந்தைப்படுத்தப்பட வேண்டிய நிலை இருக்கிறது. கார்ப்பரேட்டுகளின் பிடியில் இருக்கிற தரவு மையங்களுக்கு 2047-ம் ஆண்டுவரை வரி விலக்கு அளிக்க வேண்டிய அவசியம் என்ன? இதனால் பயனடையப்போகிற கார்ப்பரேட் தொழிலதிபர்கள் யார்? இந்த மையம் உற்பத்தி சார்ந்ததோ, வேலை வாய்ப்பு வழங்குவதோ அல்ல. இது ஒரு தொழில்நுட்ப அமைப்பு.
இந்தியாவில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டு விட்டதாக நிர்மலா சீதாராமன் உரையில் கூறியிருக்கிறார். ஆனால் நம்பகத்தகுந்த சர்வதேச நிறுவனங்கள் வெளியிட்ட வறுமை குறியீடு தரவரிசை பட்டியலில் இந்தியா 109-வது இடத்தில் இருக்கிறது. இந்த பின்னணியில் நிர்மலா சீதாராமன் அறிக்கை என்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நகரங்களிலும், கிராமங்களிலும் வாழ்கிற மக்களிடையே வருமான ஏற்றத்தாழ்வுகள் மோடி ஆட்சியில் அதிகரித்துக்கொண்டே போகின்றன. பெரும்பாலான கிராமங்களில் வாழுகின்ற மக்கள் இதனால் நகரங்களை நோக்கி குடி பெயர்ந்து வருகிறார்கள். மொத்த மக்கள் தொகையில் 64.9 சதவீதம் பேர் வறுமையின் பிடியில் இருப்பதாக புள்ளி விபரம் கூறுகிறது. இதில் பெரும்பாலான மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கிறார்கள். இவர்களது வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காகதான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் 15 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டார்கள். இத்தகைய வறுமை ஒழிப்பு திட்டத்தின் பெயரை மாற்றி புதிய திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இதை எப்படி நடைமுறைப்படுத்த போகிறார்கள் என்கிற அறிவிப்பு எதுவும் பட்ஜெட்டில் இல்லை.
16-வது நிதிக்குழு அறிக்கையை ஏற்றுக்கொண்டதாக நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார். இதில் மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டது. ஆனால் 41 சதவீதமாக அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு உற்பத்தித்துறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்கு 25 சதவீதமாக உயர்த்தப்படும் என்று மத்திய பாஜக அரசு அறிவித்தது. ஆனால் தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உற்பத்தித் துறையின் பங்கு 12.9 சதவீதமாக தான் இருக்கிறது. இத்தகைய குறைவான உற்பத்தியினால் வேலை வாய்ப்புகள் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. வேலையில்லா திண்டாட்டம் தொடர்வதற்கு உற்பத்தித்துறையின் முடக்கம் ஒரு முக்கியமான காரணமாகும்.
எனவே 12 ஆண்டு கால பாஜக ஆட்சியில் 2014-ம் ஆண்டு கொடுத்த எந்த வாக்குறுதிகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, விவசாயிகள் வருமானத்தை இரு மடங்காக கூட்டுவேன், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டபூர்வமாக்குவது போன்ற வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத நிலையில் தான் 2019, 2024 ஆகிய தேர்தல்களில் மக்களிடையே வகுப்புவாத அரசியலை பயன்படுத்தி வாக்குகளை பெற்று பாஜக ஆட்சியில் அமர்ந்தது. அன்று முதல் இன்று வரை மக்களை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்லுகிற உருப்படியான திட்டங்களோ, நிதி ஒதுக்கீடோ இல்லாத ஒரு மக்கள் விரோத பட்ஜெட்டாக தான் இது அமைந்திருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.