தமிழக செய்திகள்

ஒளிப்பதிவாளர் வேல்முருகன் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல் - ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

"சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்த வேல்முருகன், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த 14.6.2020 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். வேல்முருகனின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களுக்கும், அரசுக்கும் இடையில் இணைப்பு பாலமாக இருந்து வரும் பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையில் பணியாற்றும் நண்பர்கள், செய்திகளை சேகரிக்க செல்லும் போது, மிக கவனமாகவும், பாதுகாப்பாகவும் செல்லுமாறும் நான் அன்போடு இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT