சென்னை,
மேகதாது பிரச்சினையில் கர்நாடகத்திற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படக்கூடாது என்பதை வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க. உறுப்பினர்கள் குரல் எழுப்புவார்கள் என்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த எம்.பி.க்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 19-ந் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தி.மு.க. எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிப்பதற்கான கூட்டம் அண்ணா அறிவாலயம், முரசொலிமாறன் அரங்கில் நேற்று மாலை நடந்தது.
இந்த கூட்டத்திற்கு தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், கனிமொழி உள்பட தி.மு.க. எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்துவது, 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்துவது, மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் மற்றும் தமிழக நலன் சார்ந்த விவகாரங்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்வதிலும் தி.மு.க. எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து மு.க.ஸ்டாலின் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மேகதாது அணை பிரச்சினையில் கர்நாடகத்திற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படக்கூடாது என்பதை வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க. உறுப்பினர்கள் குரல் எழுப்ப முடிவு செய்யப்பட்டது.
நாடாளுமன்றத்தில் தி.மு.க.வுக்கு 24 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் தி.மு.க.வுக்கு 8 எம்.பி.க்களும் உள்ளனர். நாடாளுமன்றத்தில் இந்தியாவிலேயே 3-வது பெரிய கட்சியாக தி.மு.க. இருக்கிறது. நீட் தேர்வு, விவசாய சட்டங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்சினையில் தி.மு.க.வின் நடவடிக்கைக்கு கூட்டணி கட்சியான, இந்தியாவின் 2-வது பெரிய கட்சி காங்கிரசும் நாடாளுமன்றத்தில் ஆதரவளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க. உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவர இருக்கிறார்கள்.