தமிழக செய்திகள்

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு எடப்பாடி பழனிசாமி ரூ.15 லட்சம் ஊக்க தொகை வழங்கினார்

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு எடப்பாடி பழனிசாமி இன்று ரூ.15 லட்சம் ஊக்க தொகையை வழங்கினார்.

சென்னை,

கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த 23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். 30 வயதான கோமதியின் சொந்த ஊர் திருச்சியை அடுத்த முடிகண்டம் கிராமமாகும்.

வறுமையான குடும்ப பின்னணியை கொண்ட கோமதி பல்வேறு சோகங்களுக்கு மத்தியிலும் போராடி சாதனை படைத்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து இருக்கிறார். தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ஏற்கனவே காங்கிரஸ் சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு, அ.தி.மு.க. சார்பில் ரூ.15 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என இன்று அறிவிக்கப்பட்டது. இதன்படி இந்த ஊக்க தொகையை சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் அவரிடம் வழங்கினர்.

SCROLL FOR NEXT