சென்னை,
புதுச்சேரி துணை நிலை கவர்னரும் தெலுங்கானா கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி (76) உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் தெலுங்கானாவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து சாலை மார்க்கமாக விருகம்பாக்கத்தில் உள்ள தமிழிசை சவுந்தரராஜனின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி, கிருஷ்ணகுமாரி அம்மாளின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார். அதனை தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, பொன்முடி உள்ளிட்டோர் வருகை தந்து கிருஷ்ணகுமாரி அம்மாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதனை தொடர்ந்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆறுதல் கூறினார். மேலும் பல்வேறு அரசியல் தலைவர்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்த உள்ளனர். கிருஷ்ணகுமாரி அம்மாளின் இறுதி ஊர்வலம் நாளை மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.