சென்னை
தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தொடர்ந்து காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் முழு ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்து விஜய் முதல்-அமைச்சராகி உள்ளார். அவர் சட்டசபையில் பெரும்பான்மையையும் நிரூபித்து இருக்கிறார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதல்-அமைச்சர் விஜய் நாளை டெல்லி செல்கிறார். இதற்கு முன்பு ஜனவரி 12 மற்றும் 19 ஆகிய நாட்களில் சி.பி.ஐ. சம்மனுக்கு நேரில் ஆஜராவதற்காக அவர் டெல்லி சென்றார். முதல்-அமைச்சரான பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் டெல்லி பயணம் இதுவாகும்.
இதற்காக அவர் நாளை காலை 10 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். அவர் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில், திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் நாளை மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். தமிழகத்தில் அரசியல் சூழல் அடுத்தடுத்து பரபரப்பாக காணப்படும் நிலையில், பிரதமர் மோடியுடனான முதல்-அமைச்சர் விஜய்யின் நாளைய சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
அப்போது, தமிழக நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்பாக பிரதமரிடம் மனு அளிக்கிறார். இந்த பயணத்தின்போது, ஜனாதிபதி திரவுபதி முர்முவையும், மந்திய மந்திரிகளையும் சந்திக்கிறார் என்றும் தகவல் தெரிவிக்கின்றது. இதன்பின்பு முதல்-அமைச்சர் விஜய் 28-ந்தேதி சென்னை திரும்புகிறார்.