கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் கிராமத்தின் ஒளி தொண்டு நிறுவனம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, கிராமத்தின் ஒளி நிர்வாக இயக்குனர் டாக்டர் சக்தி கிரி, இயக்குனர் மேகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியானது கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு கச்சிராயப்பாளையம் சாலை, கடைவீதி வழியாக சென்று மந்தவெளியில் முடிவடைந்தது. இதில் அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் கிராமத்தின் ஒளி தொண்டு நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.