சென்னை,
கொரோனா நோய்த்தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் ஏப்ரல், மே மாதங்களில் கல்லூரிகளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
கொரோனா தாக்கத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டும், மாணவர்களின் நலன் கருதியும் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை தவிர, மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, முதலாம், 2-ம், 3-ம் ஆண்டு இளநிலை என்ஜினீயரிங் படிப்பு, முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் பட்டப்படிப்பு, முதலாம் மற்றும் 2-ம் ஆண்டு எம்.சி.ஏ. படிக்கும் மாணவர்களுக்கான ஏப்ரல், மே மாத செமஸ்டர் தேர்வில் இருந்து விலக்கு அளித்து, அடுத்த கல்வியாண்டுக்கு செல்ல அரசு அனுமதித்தது.
சென்ற செமஸ்டரில் மாணவர்கள் பெற்ற புற மதிப்பீட்டு மதிப்பெண்கள், ரத்து செய்யப்பட்ட செமஸ்டரின் அக மதிப்பீடு மற்றும் தொடர்ச்சியாக அக மதிப்பீட்டு மதிப்பெண்களை கணக்கிட்டு மதிப்பெண்கள் வழங்க உயர் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இளநிலை என்ஜினீயரிங் படிப்பில் முதலாம், 2-ம், 3-ம் ஆண்டு படித்த மாணவர்கள் அனைவரும் (சுமார் 2 லட்சம் பேர்) தேர்ச்சி பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதுநிலை படிப்புக்கான தேர்ச்சி குறித்த தகவல் இல்லை.
இந்த மதிப்பீட்டு முறையில் உடன்பாடு இல்லாத மாணவர்கள் பின்னர் நடத்தப்படும் தேர்வில் பங்குபெற்று தங்களின் மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ளலாம் என்று உயர் கல்வித்துறை ஏற்கனவே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.