தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; மாணவர் பலி

மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் மாணவர் உயிரிழந்தார்.

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை சேர்ந்த ரவியின் மகன் ராஜேஷ்(வயது 21). இவர் பாலிடெக்னிக் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர், தனது நண்பர் முத்தமிழ்செல்வனுடன்(21) சென்று கீழப்பழுவூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர்கள் உடையார்பாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். பொய்யூரை அடுத்த மேலக்கருப்பூர் பிரிவு சாலை அருகே சென்றபோது மேலக்கருப்பூரை சேர்த்த உமாபதி(58) ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளை திருப்பியுள்ளார். அப்போது அந்த மோட்டார் சைக்கிள் மீது முத்தமிழ்செல்வன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேஷ் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முத்தமிழ்செல்வன், உமாபதி ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்கள், தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ராஜேசின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி வெளியாகியுள்ளது. சைகை செய்யாமல் மோட்டார் சைக்கிளை திருப்பியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து கீழப்பழுவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.