சென்னை,
தகவல் தொழில் நுட்பம் (ஐ.டி.) இல்லாத உலகத்தை இப்போது நினைத்துக் கூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு அவர்களின் ஆளுகை பரவி இருக்கிறது. எவ்வளவு தான் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவராக இருந்தாலும், நோய் தாக்குதல் என்பது எல்லோருக்கும் ஒன்று தான். அந்த வகையில் கொரோனா வைரஸ் அனைத்து தரப்பினரையும் கதி கலங்க வைத்து இருக்கிறது.
அரசு தரப்பில் நோய் பரவிவிடாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் வைரஸ் பரவுவதால் தான் இந்த நோய் வீரியம் அடைகிறது. எனவே பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல், ஐ.டி. நிறுவனங்களில் ஏராளமானோர் பணிபுரிந்து வருகிறார்கள். வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தமிழகத்தில் பணிபுரிகின்றனர். இந்தநிலையில் ஐ.டி. நிறுவனங்களில் சில நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வாய்ப்பு வழங்கி இருக்கின்றனர்.
சில நிறுவனங்கள் குறிப்பிட்ட சிலரை மட்டும் வீட்டில் இருந்து பணிபுரிந்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்து இருக்கின்றனர். ஆனால் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கத்தினர் அனைத்து ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கி, வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்
இதுதொடர்பாக அச்சங்கத்தின் நிர்வாகி பரணி கூறுகையில், 30 சதவீதம் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணிபுரிய நிறுவனங்கள் அனுமதித்து இருக்கின்றன. அதேபோல், மீதமுள்ள ஊழியர்களையும் அனுமதிக்க வேண்டும். ஏனென்றால் இந்த துறையில் தான் வெளிநாடுகளுக்கு செல்வதும், திரும்பி வருவதும் என பயணம் இருக்கும். எனவே இதை நிறுவனங்கள் கவனித்து வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்றார்.